பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! வரும் ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட உள்ளன. 1980-ம் ஆண்டு திருத்தப்பட்ட பாஸ்போர்ட் விதிமுறைகளின்படி, சாதாரண மற்றும் தக்கல் பாஸ்போர்ட்களுக்கான கட்டணங்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய கட்டண விபரங்களின்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆகவும், தக்கல் முறையில் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்ந்துள்ளது. இது புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கும் பொருந்தும். இதேபோல், 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தக்கல் முறையில் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கு ரூ.5,000-ம், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கு ரூ.6,000-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டண விதிமுறைகள் 2026, ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே, ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிப்பவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.
முன்னதாக, ஜூன் 24 அன்று நடைபெற்ற பாஸ்போர்ட் சேவை தின நிகழ்ச்சியில், குடியுரிமைக்கான சான்றாக பாஸ்போர்ட்டை கருத முடியாது, அது பயணத்திற்கான ஆவணம் மட்டுமே என வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.