கோவாவின் புகழ்பெற்ற பாகா கடற்கரையில் பாறை மீது அமர்ந்து வீடியோ எடுக்கும்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி சுற்றுலாப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஜாபூரைச் சேர்ந்த 34 வயது அஷ்பக் மசாலி என்ற சுற்றுலாப் பயணி, அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கோவா மாநிலத்திற்கு தினந்தோறும் வெளி மாநில மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் இங்குள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த கோவா அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகளில் குளிப்பதை பெரிதும் விரும்புகின்றனர். ஆனால், பாதுகாப்பு எல்லையை தாண்டி ஆழமான பகுதிக்குச் செல்வதால், எதிர்பாராத ராட்சத அலைகள் மற்றும் கடல் சுழல்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.
சமீபத்தில், பாகா கடற்கரையில் உள்ள பாறை மீது அமர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அஷ்பக் மசாலி, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கினார். நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், அவர் கண் இமைக்கும் நேரத்தில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த துயரச் சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளும் தடைபட்டன.
தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனர். இருப்பினும், உயர் அலை மற்றும் மோசமடைந்து வரும் கடல் நிலை காரணமாக தேடுதல் பணி இடைநிறுத்தப்பட்டது. பின்னர், மசாலியின் உடல் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.