மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபிக்கடலின் மத்திய பகுதி, மும்பை, மராட்டியத்தின் பல்வேறு பகுதிகள், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஷ்கார், ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
வழக்கமாக ஜூன் 10-ம் தேதி தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு தாமதமாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பருவமழை தொடங்கியது. வரலாற்றிலேயே மிகவும் தாமதமாக 1958 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் ஜூன் 28-ம் தேதி பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 13 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு நேற்று இரவு மும்பையில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
கனமழை காரணமாக, மும்பை மற்றும் அருகிலுள்ள பால்கர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தானே மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டும், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மூன்றாவது நாளாக நகரில் மழை கொட்டித் தீர்த்தது. காலை 7 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்தது. பிற்பகல் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இருப்பினும், மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, ஏரிகளில் 8.07% மட்டுமே தண்ணீர் உள்ளது. மழை பெய்த போதிலும், சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.