சட்டமன்றத்தை படப்பிடிப்பு தளமாக மாற்ற வேண்டாம், நிஜ வாழ்க்கைக்கு வாருங்கள் என முதலமைச்சர் விஜயை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் எப்படி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் விஜய்க்கு அறிவுரை கூறுவது போல், ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஜெயகுமார் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில், சட்டமன்றம் என்பது பொது மேடை என்றும், மக்களுக்காகப் பேசுவதே கடமை என்றும், எதிர்க்கட்சிகளை மதிப்பது, உணர்ச்சிகளை அல்ல உண்மைகளைப் பேசுவது, தரவுகளுடன் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்ப்பது, செயலால் நிரூபிப்பது போன்ற பல ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 'சட்டமன்றம் சச்சரவு செய்யும் இடமல்ல; சேவை செய்யும் இடம்' என்ற பொன்மொழியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதிவில், 'சார் நான் ஒரு ஆக்ஷன் பண்ணிக்கலாமா!? நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை விஜய்யின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது… வாழ்த்துக்கள். ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை சூட்டிங் தளமாக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல' என்று ஜெயகுமார் கூறியுள்ளார்.
'5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல' என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றி ஒரு 5 நிமிஷமாவது பேசுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ரீல்ஸ் (Reels) விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு (Reality) வாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.