5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ரூ. 75,000 வரை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என தவெக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி முழு கடன் தள்ளுபடி செய்யப்படாததால், விவசாயிகள் தங்களை சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். இது மிகுந்த வருத்தமளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, 56 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், விவசாய மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்ட சோக நிகழ்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை தனது அறிக்கையில், 'கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது' என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தவெக அரசு உடனடியாக தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.