தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி! முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வண்டலூர், வேலூர் அமிர்தி, சேலம் குரும்பட்டி ஆகிய மூன்று உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குழந்தைகள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள். முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரண்டு நாட்களுக்கு கட்டணமின்றி பூங்காக்களை கண்டு ரசிக்கலாம். ஆன்லைனில் உங்கள் நுழைவு சீட்டை வழக்கம் போல் பெற்றுக் கொள்ளலாம்' என தெரிவித்தார்.
மேலும் அவர், 'இந்த இரண்டு நாட்களுக்கான நுழைவுக் கட்டணத்தை அரசிடம் இருந்து பெறாமல், எங்கள் குடும்ப அறக்கட்டளையான வாழ் முன் நாயக்கர் அறக்கட்டளை மூலமாக முழுமையாக செலுத்திவிடுவோம். எங்கள் ஆட்சி அமைய குழந்தைகளே காரணம். எனவே, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் கட்டணமின்றி தமிழகத்தில் உள்ள மூன்று உயிரியல் பூங்காக்களுக்கு செல்லலாம். இது முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாகும்' என்றும் கூறினார்.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் இந்த அறிவிப்புக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், 'உயிரியல் பூங்காக்கள் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? நேற்று கஜானாவில் காசில்லை என்று சொன்ன நீங்கள், இன்று 'இன்ஸ்டா அரசன்' விஜய்யின் பிறந்தநாளுக்காக பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி என பல்லிளிப்பது ஏன்? இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது? வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், 'முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள். அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்? இந்த 'தத்தி' முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், 'Shadow CM'ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா?' என்றும் திமுக பதிவிட்டுள்ளது.