சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் தனியாக செயல்பட்டு வந்தவர்கள், தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.
முன்னதாக, இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்திருந்தனர். இதன் காரணமாக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை வேண்டாம் என சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம் அனுப்பினார்.
இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என கடந்த வாரம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்திருந்தார். தகுதி நீக்க நடவடிக்கை இனி சாத்தியமில்லை என்ற சூழலில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர்.
தற்போது சி.வி.சண்முகம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.