ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி காற்றில் பறந்து பிடித்த அசாத்திய கேட்ச் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, 2026 ஐபிஎல் தொடரில் அவரது பீல்டிங் திறமை குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கேட்ச் அமைந்துள்ளது.
தம்புள்ளா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் காலித் தனிவால் அடித்த பந்து மின்னல் வேகத்தில் சென்றது. அப்போது 30 யார்டு வட்டத்திற்குள் நின்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி, முதல் முயற்சியில் பந்தைக் தவறவிட்டாலும், உடனடியாகச் சுதாரித்து காற்றில் முழு நீளத்திற்குப் பாய்ந்து (டைவ் அடித்து) இரண்டாவது முயற்சியில் அபாரமாகக் கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் தனிவால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக, டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 58 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் இலங்கை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட வைபவ் சூர்யவன்ஷி, இப்போட்டியில் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடி 38 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் கேப்டன் திலக் வர்மா (59) மற்றும் விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா (58) ஜோடி 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர்.
320 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11.1 ஓவர்களில் 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர் ஹசன் ஐசகில் 14 ரன்களிலும், கேப்டன் இம்ரான் மிர் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வைபவ்வின் இந்த அசாத்திய கேட்ச் மற்றும் இந்தியாவின் துல்லியமான ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.