தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை, வெற்று அறிக்கை என முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்களோ என்ற அச்சத்தில், தங்கள் இயலாமையை மறைக்கவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'வெறும் அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை! தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால், 'வாணவேடிக்கை வாக்குறுதிகளை' அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசு, நிர்வாகத் திறமையின்மையாலும், 'ஆழம் தெரியாமல் காலைவிட்டு' அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் 'புஸ்வானமாக' மாறிவிட்டது. இதை மறைக்கவே 'ஹைப்' ஏற்றிய அறிக்கை ஒன்றை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு, அதனையும் 'ஃப்ளாப்' ஆக்கியுள்ளது.'
மேலும் அவர், 'கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி, அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டு இருக்கின்றது. வேறு எதற்குமல்ல!' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இதுகுறித்து உரிய விளக்கங்களை விரைவில் விரிவாக அளிப்பதாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த வெள்ளை அறிக்கையின் வெளியீடு, அரசின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.