இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய ஏ அணியில் புதிய வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த யுத்வீர் சிங்கிற்கு பதிலாக, மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் திறன்கொண்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் அசோக் சர்மா இந்திய ஏ அணியில் இணைந்துள்ளார்.
தம்புள்ளாவில் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா ஏ, இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் யுத்வீர் சிங் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, 23 வயதான அசோக் சர்மா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை இலங்கைக்குப் புறப்பட்டு, தம்புள்ளாவில் உள்ள இந்திய அணியுடன் இணைவார்.
இந்த அறிவிப்பு வருவதற்கு ஒரு நாள் முன்புதான், அசோக் சர்மா தனது உள்நாட்டு கிரிக்கெட் அணியை ராஜஸ்தானிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு மாற்றினார். இதற்காக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. சிறந்த வாய்ப்புகளுக்காகவே குஜராத் அணிக்கு மாறியதாக அசோக் சர்மா தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகமான அசோக் சர்மா, மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் கவர்ந்தார். இந்தத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தனது பந்துவீச்சு குறித்து பேசிய அசோக் சர்மா, கடந்த 2022ல் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வழங்கிய ஆலோசனையை நினைவுகூர்ந்தார். 'எனது பலம் என்ன?' என்று கம்மின்ஸ் கேட்டதாகவும், 'வேகமாகவும், கடினமான லெந்திலும் பந்துவீசுவது எனது பலம்' என்று தான் கூறியதாகவும், அதை மட்டுமே தொடர்ந்து செய்யும்படி கம்மின்ஸ் அறிவுறுத்தியதாகவும், அவரது வார்த்தைகள் இன்றும் நினைவில் இருப்பதாக அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.