லண்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தியதன் மூலம், 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்லும் இந்திய அணியின் வாய்ப்பு வெறும் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தற்போது சண்டிகரில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கினாலும், இந்தப் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம்பெறாததால், அதன் புள்ளிப்பட்டியலில் எந்த தாக்கமும் ஏற்படாது.
நடப்பு 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வி, 1 டிரா என 48.15 சதவீத புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேற, எஞ்சியுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 140, நியூசிலாந்து 113 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 226 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியால் இங்கிலாந்து அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.