சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டே வயது பெண் குழந்தை, சிங்கப்பெண் அதிரடி படையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாலபத்ராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகளுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். இரவு நேரத்தில் கடற்கரை மணற்பரப்பில் குடும்பத்துடன் உறங்கிய நிலையில், அதிகாலை விழித்துப் பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறையின் எண் 100ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
புகாரின் பேரில், மெரினா காவல் நிலைய போலீசார் மற்றும் மயிலாப்பூர் சரக சிங்கப்பெண் அதிரடி படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ப்ளூ பீச் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிங்கப்பெண் அதிரடிப்படை குழுவினர் கடற்கரை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதியில், தனியாக அழுது கொண்டிருந்த இரண்டே வயது குழந்தையை அவர்கள் கண்டுபிடித்தனர்.
மீட்கப்பட்ட குழந்தையை சிங்கப்பெண் அதிரடி படை போலீசார் மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், காவல் நிலைய ஆய்வாளர் பாலபத்ராஜிடம் விசாரணை நடத்தினார். ஆந்திர மாநிலம் உப்பரபலம் பகுதியிலிருந்து சாய்பாபா படம் கொண்ட சிறிய வாகனம் மூலம் சென்னைக்கு வந்து, மெரினா கடற்கரையில் தங்கி வருவதாகவும், உறங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை தொலைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தீவிர விசாரணைக்குப் பிறகு, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் குழந்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை பத்திரமாக மீட்ட சிங்கப்பெண் அதிரடி படை போலீசாருக்கு பெற்றோர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.