தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் இனி காத்திருக்கத் தேவையில்லை! தனியாா் மருத்துவமனைகளைப் போன்று, அரசு மருத்துவமனைகளிலும் முன்பதிவு (அப்பாயின்மென்ட்) செய்யும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கருத்துக்களைக் கேட்டறிய சிறப்பு குழு அமைக்கப்படும். இந்தக் குழு வாரந்தோறும் கூடி, நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது, மருத்துவமனை சுகாதாரத்தை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்கும். மேலும், தொடர் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடும்.
தற்போது அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வெயிலில் காத்திருக்கும் நிலையை போக்கவே இந்த புதிய முன்பதிவு முறை கொண்டுவரப்படுகிறது. இதற்காக, தனியாா் நிறுவனம் மூலம் 'பிரத்யேக செயலி' ஒன்று உருவாக்கப்படும். இந்த செயலியில், ஆதார் அட்டையைப் பயன்படுத்தி காலை 8 மணி முதல் 9 மணி வரை மருத்துவ சேவைக்கு முன்பதிவு செய்யலாம்.
இந்த புதிய நடைமுறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். அரசு மருத்துவமனைகளில் இதய நலம், மகப்பேறு சிகிச்சை, பக்கவாதம், டயாலிசிஸ் போன்ற உயர்தர சிகிச்சைகள் தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகராக அளிக்கப்படுகின்றன. மகப்பேறு பரிசோதனைக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.60 ஆயிரத்துக்கு மேல் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் இது முற்றிலும் இலவசம். அறுவை சிகிச்சைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் புதிதாக சிறப்பு மருத்துவர், செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். மருத்துவமனைகளில் பெரிய அளவில் மின்தடை இல்லை என்றாலும், மின்தடை ஏற்பட்டாலும் நோயாளிகள் பாதிக்காத வகையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையற்ற மின் சேவையை உறுதி செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுப்பணித் துறை, மின்வாரியம் ஆகியவை இணைந்து சிறப்புக் குழு அமைக்கும்.
திருச்சி செவிலியர் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், உடல் கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.