தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீநதி, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வந்த மாணவி மயக்கமடைந்த நிலையில், ஆசிரியரின் அலட்சியத்தால் அவரது உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடகரை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி-முருகேஸ்வரி தம்பதியரின் மகள் ஸ்ரீநதி, நேற்று பள்ளிக்கு வந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார். சக மாணவிகள் மற்றும் வகுப்பு ஆசிரியரின் உதவியுடன் வகுப்பறை மேசையில் அமர வைக்கப்பட்டார். 'மூச்சு இருக்கிறது, ஒன்றும் செய்ய வேண்டாம்' என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. வலிப்பு ஏற்பட்ட மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.
சக மாணவிகளின் கண்முன்னே ஸ்ரீநதி அவதிப்பட்ட நிலையில், அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கூலி வேலைக்குச் சென்றிருந்த பெற்றோர் பள்ளிக்கு வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகியுள்ளன. அதுவரை மாணவி வலிப்பு நிலையிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மாணவி பள்ளியிலேயே மயக்கமடைந்துள்ளார். மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்ததும், பேச்சு மூச்சின்றி இருந்த மகளை ஆட்டோவில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஸ்ரீநதி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தலைமை ஆசிரியர் இல்லாதது, ஆசிரியர்கள் முதலுதவி அளிக்க முன்வராதது, பள்ளி வளாகத்தில் முதலுதவி வசதி இல்லாதது, மாணவிக்கு பிரச்சனை ஏற்பட்டபோது உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாதது, அவசர ஊர்தியான 108க்கு தகவல் தெரிவிக்க காலதாமதம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.