தமிழகத்தில் சொத்து வாங்குவோருக்கு இனி பட்டா மாற்றம் எளிதாகிவிட்டது. பொதுமக்கள் இனி தாலுகா அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. 'இ-சேவை' மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்தால், 30 நாட்களுக்குள் பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்.
முன்பு, இ-சேவை மையங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் பணிகள் பெரும்பாலும் காகித ஆவணங்கள் மூலமே நடந்தன. இதனால், பட்டா மாறுதல் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த இரட்டை வேலை மற்றும் மேனுவல் நடைமுறைகளைத் தவிர்க்க, நில அளவைத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது, நிலத்தை அளவிடுதல், குறிப்புகள் எழுதுதல், வரைபடம் தயாரித்தல் என அனைத்துப் பணிகளும் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. நில அளவையர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறையின் இந்த டிஜிட்டல் மாற்றத்தால், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் உத்தரவை விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் தாமதமின்றி ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பட்டா மாறுதலில் நிலவி வந்த காலதாமதத்திற்கும், முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.