இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 23 ஜூன் 2026 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கவுள்ளார். இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் ஆளுமையாக திகழும் மம்மூட்டிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் கட்டே பாபு ராஜேந்திர பிரசாத், தனது இயல்பான நகைச்சுவையால் மக்களை கவர்ந்த நடிகர் சதீஷ் ஷா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'மேடி' என்று அழைக்கப்படும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மாதவனுக்கும் கலைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள், இந்திய சினிமா மற்றும் கலைத்துறையில் இந்த கலைஞர்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது. மம்மூட்டியின் நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்புத் திறமை, அவரை இந்திய திரையுலகின் கலாச்சார அடையாளமாக மாற்றியுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது பெற்ற அனைவருக்கும் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.