தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகிற 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய அவர், முதல்வரின் பிறந்தநாளை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், 'ரீல்ஸ்' எடுப்பதாகக் கூறி அட்ராசிட்டியில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார். இதற்கு முன்னர் விழாக்கள் நடக்கும்போது பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து கேட்டால் தொண்டர்கள் வைத்துவிட்டதாக நிர்வாகிகள் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, இனி த.வெ.க. சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் பேனர்கள் வைக்கக்கூடாது என உத்தரவிட்டார்.
முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், பேனர் கலாச்சாரம் த.வெ.க.வில் இருக்கக்கூடாது என்றும், மீறி வைத்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மேலும், திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து த.வெ.க.வில் இணையும் புதியவர்களுக்கு கட்சிப் பதவி கொடுத்து கௌரவிக்க வேண்டியது அவசியம் என்றும், இதனால் தற்போதைய நிர்வாகிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
செயல்படாத நிர்வாகிகள் மற்றும் கோஷ்டி மோதலில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்றும், மாற்றுக்கட்சியினருக்கு பதவி வழங்கும் போது அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை கலந்தாலோசித்து தலைமை முடிவெடுக்கும் என்றும் புஸ்ஸி ஆனந்த் கூட்டத்தில் விளக்கினார்.