ஐபிஎல் தொடரை விமர்சிக்கும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிசிசிஐ வழங்கும் 10 சதவீத தொகையை மறந்துவிட்டு குறை கூறுவதாக அவர் சாடியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடினார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. சர்வதேச போட்டிகளை விட உள்ளூர் டி20 லீக் தொடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறி, இங்கிலாந்தின் மைக்கேல் வான், நியூசிலாந்தின் சைமன் டவுல் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் ஆர்ச்சரையும், ஐபிஎல் தொடரையும் கடுமையாக விமர்சித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுனில் கவாஸ்கர் தனது கட்டுரையில், 'இந்திய கிரிக்கெட் வாரியத்தையும், ஐபிஎல் தொடரையும் விமர்சிப்பது வெளிநாட்டினருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக மாறிவிட்டது. தங்கள் நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது, அவர்களின் ஒட்டுமொத்த சம்பளத்தில் 10 சதவீத தொகையை பிசிசிஐ சம்பந்தப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்குகிறது. இதை எந்த விமர்சகர்களும் பேசுவதில்லை. ஐபிஎல் தொடர் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் பவுண்டுகளை மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்கி வருகிறது. இந்திய கிரிக்கெட் மற்றும் ரசிகர்களின் பணத்தை வைத்து தான் பல வெளிநாட்டு வாரியங்கள் தங்கள் கஜானாவை நிரப்புகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.
'இதையெல்லாம் மறந்துவிட்டு ஐபிஎல் தொடரையும், இந்திய கிரிக்கெட்டையும் குறை கூறுவதை அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். நீங்கள் எவ்வளவு தான் கீழே தள்ள நினைத்தாலும், இந்திய கிரிக்கெட் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பதை விமர்சகர்கள் விழித்துக்கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்' என கவாஸ்கர் ஆவேசமாக கூறியுள்ளார்.