சென்னை: அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக, கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு விளம்பரப்படுத்த வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பு அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பினரின் கட்சிப் பதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். மேலும் புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். அதிமுக மீண்டும் இணைந்ததால், பல்வேறு மாவட்டங்களில் பிரிந்து சென்றவர்களின் பொறுப்புகளை குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில், கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு விளம்பரப்படுத்த வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இது அதிமுக தலைமை மீது அதிருப்தி கொண்டு, விஜய்க்கு ஆதரவு அளித்துவிட்டு, பின்னர் மனம் திருந்தி திரும்பியவர்களுக்கு பறிக்கப்பட்ட பதவியை மீண்டும் வழங்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதைக் காட்டுவதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த அறிவிப்பு, கட்சிக்குள் ஒழுக்கத்தைக் கொண்டு வருவதாகவும், விசுவாசமான தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. அதிமுகவில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.