தமிழக சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். த.வெ.க. அரசுக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு தெரிவித்த நிலையில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என தகவல் பரவியது. ஆனால், இதனை வேலுமணி தரப்பினரும், த.வெ.க. தரப்பினரும் மறுத்து வந்தனர்.
இந்தநிலையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். இதேபோல, ஆற்காடு சுகுமார், பண்ருட்டி மோகன், காங்கயம் நடராஜன், சங்கரன்கோவில் திலீபன், அந்தியூர் ஹரிபாஸ்கர், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அணி மாறி, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், மன்னிப்பு கடிதமும் வழங்கினர். இதனால் எஸ்.பி.வேலுமணி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 15 ஆக குறைந்தது. எடப்பாடி பழனிசாமி அணியில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
இதையடுத்து, அ.தி.மு.க.வில் இரு பிரிவு அணிகளையும் இணைக்க எஸ்.பி.வேலுமணி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினர். கட்சியில் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் எனவும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் திரும்ப பெறவும் வலியுறுத்தினர். ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது. இருப்பினும், மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை எம்.ஆர்.சி.நகரில் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், லீமாரோஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கடிதத்தை வழங்கி இணைந்தனர். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் செல்லவில்லை. சி.விஜயபாஸ்கர் தலை மைச்செயலகத்திற்கு நேரடியாக சென்றிருந்தார். சி.வி.சண்முகம் சென்னை பால வாக்கம் வீட்டில் இருந்தார். பின்னர், பேச்சுவார்த்தை முடிந்தபின் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, 'தற்போது நான் எதுவும் பேச விரும்பவில்லை' எனக்கூறி எந்த பதிலையும் தெரிவிக்காமல் காரில் ஏறி அவர் கோபத்துடன் புறப்பட்டு சென்றார். அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய விருப்பம் இல்லாமல் மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், புதுக்கோட்டை இலுப்பூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தபின் முன்னாள் அமைச்சர் சி.வி.பாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 'எனக்கு தொகுதி மக்கள்தான் முக்கியம். தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும்' என்றார்.