சென்னை: அதிமுகவில் இருந்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதற்கான கடிதங்களை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் சமர்ப்பித்தனர். சபாநாயகர் இந்த ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
ராஜினாமா செய்தவுடன், இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த மற்றொரு அதிமுக எம்.எல்.ஏ.வான அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்தார். இதனால், தாராபுரம், பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்கு தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் தற்போது ராஜினாமா செய்தவர்களே போட்டியிடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எம்.ஜி.ஆர். மரபை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் விஜய் முயற்சிப்பதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், 'தமிழகத்தில் நடக்கும் அரசியல், எம்.ஜி.ஆர். மரபுக்கும் விஜய் மரபுக்கும் இடையிலான யுத்தம். அதிமுக எம்.எல்.ஏ.க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனப்படுத்தி, எம்.ஜி.ஆர். மரபை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் விஜய் முயல்கிறார். ஆனாலும் இறுதியில் எம்.ஜி.ஆரே வெல்வார்!' என்று பதிவிட்டுள்ளார்.
