திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'விடியல்' பயணத்திட்டத்தின் கீழ், அரசு மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணித்து வந்தனர். ஆனால், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் இன்று (14.05.2026) ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில், 'தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது' என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
மேலும், 'தமிழ்நாடு அரசு சார்பாக இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை' என்றும் தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கான ஆதாரமாக, இன்று அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்ட இலவச பயணச்சீட்டின் புகைப்படத்தையும் அவர்கள் இணைத்துள்ளனர். எனவே, மகளிர் இலவச பேருந்து சேவை தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிருக்கான இந்த முக்கியத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.