இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை, தியாகத்தையும் சகோதரத்துவத்தையும் போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இந்த நன்னாளில், இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
துல்ஹிஜ்ஜா மாதத்தின் 10ம் நாள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று அதிகாலையிலேயே புத்தாடைகளை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். தொழுகைக்குப் பிறகு, ஏழை எளிய மக்களுக்கு குர்பானியாக ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சியை தானமாக வழங்கினர். இந்த பண்டிகை இறை நம்பிக்கை, இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.
சென்னையிலும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெரம்பூர், ஓட்டேரி, ராயபுரம், புரசைவாக்கம், அண்ணாநகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள், சிறுவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தின் மேலப்பாளையம் போன்ற இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த தொழுகைகளில், நாட்டில் அமைதி நிலவவும், அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.
