திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், தனது வளர்ப்புத் தாயார் மற்றும் மாமாவுடன் திருவண்ணாமலைக்கு சரக்கு வாகனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களான சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரு காவலர்களும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்காமல் தாமதம் செய்வதாகக் கூறி, பாதிக்கப்பட்ட இளம் பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்கும் வகையில் நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 22-க்கு தள்ளிவைத்தனர். அதேநேரம், திருவண்ணாமலை மகளிர் நீதிமன்ற நீதிபதி தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து, ஜூலை 31-க்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டனர்.
