தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சி நிலவினாலும், சில மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் (100.8 டிகிரி பாரன்ஹீட்), மீனம்பாக்கத்தில் 39.5 டிகிரி செல்சியஸ் (103.1 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. இதேபோல், ஈரோட்டில் 38.0 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்), மதுரையில் 39.2 டிகிரி செல்சியஸ் (102.6 டிகிரி பாரன்ஹீட்), மதுரை விமான நிலையத்தில் 38.5 டிகிரி செல்சியஸ் (101.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.
மேலும், பாளையங்கோட்டையில் 39.9 டிகிரி செல்சியஸ் (103.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகி, இதுவே அதிகபட்சமாக பதிவான வெப்பநிலையாகும். பரங்கிப்பேட்டையில் 38.2 டிகிரி செல்சியஸ் (100.8 டிகிரி பாரன்ஹீட்), தஞ்சாவூரில் 38.0 டிகிரி செல்சியஸ் (100.4 டிகிரி பாரன்ஹீட்), திருச்சியில் 38.4 டிகிரி செல்சியஸ் (101.1 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.
இது தவிர, புதுச்சேரியிலும் 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வெயில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.