கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (மே 26) காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கே.சி. வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சித்தராமையாவிடம் கோரப்பட்டதாகவும், ராஜினாமாவுக்குப் பிறகு அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையிலும் சேர்க்கப்படுவார் என்ற சமரசத் திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்ட சித்தராமையாவிடம், அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என கார்கே சுட்டிக்காட்டியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், பெங்களூரு திரும்பிய சித்தராமையாவை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து, பதவியில் நீடிக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், கட்சித் தலைமை முடிவெடுத்துவிட்டதால் தன்னால் தொடர இயலாது என சித்தராமையா கூறியதாக ஆர்.வி.தேஷ்பாண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சித்தராமையாவை அமைச்சர்கள் ஹெச்.கே. பாட்டீல், ஹெச்.சி. மகாதேவப்பா, ஜமீர் அகமது கான் உள்ளிட்டோரும், சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நாளை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்திக்க சித்தராமையா நேரம் கோரியுள்ளதாகவும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு காலை உணவு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.