தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதிய கல்வியாண்டில் (2026-27) 4 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே திறப்பு தேதியை அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.
மேலும், வானிலை முன்னறிவிப்பு, பள்ளிகள் திறப்பதற்கு முன்பான சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் போன்ற ஆயத்தப் பணிகளையும் தமிழக அரசு ஆய்வு செய்தது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.