தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், இடைத்தரகர்களைத் தவிர்த்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ கிரேடு நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.2,545 மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.2,500 என ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
குறுவை மற்றும் சம்பா அறுவடை காலங்களில் இந்த கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய, அருகிலுள்ள நிலையங்களை அணுகலாம் அல்லது www.tncsc-edpc.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு மற்றும் விவரங்களை அறியலாம். மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 48 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இருப்பினும், விவசாயிகள் சில முக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நெல் எடை போட மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும், மூட்டைக்கு 2 கிலோ வரை கூடுதலாக எடை பிடிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மழைக்காலங்களில் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தினால் சிரமம் குறையும் என விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். நெல் உலர வைக்கும் இயந்திரங்களை அரசு கையாண்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நெல் மூட்டை எடை போடும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.10 மட்டுமே அரசு கூலியாக வழங்குகிறது. இது போதுமானதாக இல்லாததால், அவர்கள் விவசாயிகளிடம் ரூ.60 வரை வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க, மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வழங்கினால் கூடுதல் வசூல் தடுக்கப்படும். மேலும், நெல் கொள்முதல் செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகியும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வராததால், நிதி நெருக்கடி ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சனைகளை புதிய அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
