பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்குச் சென்ற திமுகவினரை, விசிகவினர் வழிமறித்து தாக்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடம் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை 6-வது கட்டமாக மேலமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் இன்று நடத்தினார். இதற்காக பெரம்பலூரில் இருந்து திமுகவினர் காரில் குன்னத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிக மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் காத்திருந்த விசிகவினர், திமுகவினர் வந்த காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகராறு முற்றி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் போலீஸார், இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லச் செய்தனர்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி லலித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விசிகவை விமர்சனம் செய்ததால் கோபமடைந்த விசிகவினர், திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் திமுகவினரே அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.