புதுடெல்லி: 'லேர்ன் நெக்ஸ்ட்' என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில், நிதி ஆயோக் அதிகாரியும் அடல் புதுமை கண்டுபிடிப்பு திட்ட இயக்குநருமான தீபக் பக்லா பங்கேற்றார். அவர் 'வளர்ந்த இந்தியா 2047: இந்திய கல்வியின் எதிர்காலம் தொழில் முனைவோர் திறனா?' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்தியாவின் கல்வி முறை உலகளவில் சிறந்து விளங்கக்கூடிய நபர்களை உருவாக்கியுள்ளது. சர்வதேச நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக செயல்படும் இந்தியர்களிடம், ஒரு வேலையை செய்து முடிக்கும் திறன் மற்றும் எந்தவொரு வழிகாட்டுதலும் இன்றி செயல்படும் திறன் என இரண்டு விதமான திறன்கள் உள்ளன. இது இந்திய கல்விமுறையின் சிறப்பை காட்டுகிறது.
இந்தியாவின் கல்வி முறை, தேர்வு என்ற ஒரு கட்டமைப்பிலிருந்து புதுமை கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் திறன் மற்றும் தகவமைப்புத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.
புதுமை கண்டுபிடிப்புகளின் ஊக்கத்தால், இந்தியாவிலிருந்து அதிகளவில் தொழில்முனைவோர் உருவாகி வருகிறார்கள் என்று தீபக் பக்லா தெரிவித்தார். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என்றும் அவர் கூறினார்.