திண்டுக்கல்லைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஜெயபிரகாஷ் குடும்பத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு சாம்ராட் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அமெரிக்காவில் முதன்மை செயல் அதிகாரியாக பணிபுரியும் சாம்ராட், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பியாங்காவை காதலித்தார்.
பியாங்கா தனது குடும்பத்துடன் அமெரிக்க குடியுரிமை பெற்று சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். தனியார் துறையில் பணிபுரியும் இவர், வேலை நிமித்தமாக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றபோது சாம்ராட்டுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மலர்ந்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இருவரின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சாம்ராட் குறித்து அறிந்த பியாங்காவின் பெற்றோர், தமிழ் கலாசார முறைப்படி திருமணத்தை நடத்த விருப்பம் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட சாம்ராட் குடும்பத்தினர், அமெரிக்காவிலிருந்து திண்டுக்கல் வந்து திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினர்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சாம்ராட் மற்றும் பியாங்காவுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. காசி யாத்திரை செல்லுதல், பாத பூஜை, மாலை மாற்றுதல், மெட்டி அணிவித்தல் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மணமகள் பியாங்காவுக்கு மஞ்சள் கயிற்றில் தாலி கட்டி சாம்ராட் திருமணம் செய்து கொண்டார்.
