கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் 21 வயது இளம்பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மலர்ந்த நிலையில், கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான உறவை முறித்துக் கொண்டார்.
இளம்பெண் தன்னைத் தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திக், அவரைத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், இளம்பெண் அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்கள் 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இளம்பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை இளம்பெண்ணின் வீட்டின் மீது வீசியுள்ளனர்.
இதில் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து, வீட்டின் போர்டிகோவில் இருந்த செருப்பு ஸ்டாண்டில் விழுந்து தீப்பிடித்துள்ளது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கார்த்திக் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.