சென்னையில் பரபரப்பு! பிரபல ரவுடிக்கு லஞ்சம் பெற்று சலுகை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெள்ளைக்காளி என்ற பிரபல ரவுடி மீது 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
விசாரணையில், புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கும், நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கும் அழைத்துச் செல்லும் வழியில், காவல் ஆய்வாளர் மாரிமுத்து, எஸ்.ஐ. திருமுருகன், செல்லதுரை ஆகியோர் லஞ்சப் பணம் பெற்றுக்கொண்டு வெள்ளைக்காளிக்கு சலுகைகள் காட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் இந்த 3 பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த ஜனவரியில் இதே வெள்ளைக்காளி, போலீசார் வேனில் அழைத்துச் செல்லும்போது பெரம்பலூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை முயற்சியில் இருந்து தப்பினார். அப்போது, 3 போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி கொட்டுராஜா போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த பின்னணியில், தற்போது போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.