மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக எம்.பி கனிமொழி, 'தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாகவுள்ளது' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'விடிந்ததும் இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வியை எழுப்பியுள்ளது.
முன்னதாக, கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்கட்சிகள் பலவும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், தற்போது மதுரையில் நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில், குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முத்துமணிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.