பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியின் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தற்போது அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவைக் கடுமையாகச் சாடியுள்ளார். தனது தொகுதியான குன்னம் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சென்றிருந்தபோது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
'அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவையும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினையும் தேவையில்லாமல் விமர்சித்துப் பேசி வருகிறார். அவர் தனது நாவை அடக்கிக் கொண்டு பேச வேண்டும். திமுகவினரும் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அமைதியாக இருக்க மாட்டோம்' என்று எஸ்.எஸ்.சிவசங்கர் ஆவேசமாகப் பேசினார்.
மேலும், 'தமிழக அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், மக்கள் ஏற்கனவே விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். ஆளும் கட்சி, அமமுக எம்எல்ஏ-வை சட்டப்பேரவையிலேயே இழுத்த விவகாரம், குதிரை பேரம் நடத்துவதையே உறுதி செய்துள்ளது. இது குறித்த விமர்சனங்களுக்கு நாங்கள் பதிலளிக்கத் தயார்' என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும், ஜனநாயக முறைப்படி நாங்கள் செயல்பட்டு வந்துள்ளோம். ஆனால், தற்போதைய ஆளும் கட்சி, ஜனநாயகத்தை மீறி செயல்படுகிறது. அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டும். இல்லையெனில், திமுக சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்' என்று எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரித்துள்ளார்.