தமிழ்நாட்டிற்கு திமுக மாபெரும் தீங்கையும், கொடிய விஷக்கிருமியையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சவுக்கு சங்கர், தமிழ்நாட்டின் நிதி நிலையை சீராக்குவதாக கூறி பதவியேற்ற பிடிஆர் தியாகராஜன் கடுமையாக முயற்சி செய்ததாகவும், ஆனால் அவரது மகன் மற்றும் மருமகன் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டதாக அவர் கூறிய ஒரே காரணத்திற்காக, அவரை நிதித்துறையில் இருந்து மாற்றி, விருப்பமில்லாத தங்கம் தென்னரசுவை நியமித்து, நிதித்துறை செயலராக ஒரு அதிகாரியை நியமித்து, தமிழ்நாட்டை மீளமுடியாத கடன் சுமையில் தள்ளி, 8 கோடி மக்களுக்கும் துரோகம் இழைத்திருக்கிறது திமுக மற்றும் அதன் தலைவர் முக ஸ்டாலின் என்று குறிப்பிட்டுள்ளார்.
வாங்கிய கடன்கள் மக்கள் நலத் திட்டங்களுக்காக அல்ல என்றும், தேவையற்ற பாலங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகவும், அதில் 25 முதல் 35 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்குவதற்காகவுமே கடன் வாங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கடன் வாங்கியதில் பெரும் பொறுப்பு எ.வ.வேலு, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, சேகர் பாபு ஆகியோரை சேரும் என்றும், இந்த ஊழல் பணத்தில்தான் சபரீசன் 150 கோடிக்கு வாட்ச் வாங்க முடிந்தது, முக ஸ்டாலின் 3 கோடி காரில் பயணிக்க முடிந்தது, செந்தாமரை பள்ளிக்கூடங்களை வாங்கி குவிக்க முடிந்தது, உதயநிதி திரைப்படங்களில் பணத்தை கொட்ட முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஒருவர் விடாமல் அனைவர் மீதும் தமிழக அரசு ஊழல் வழக்கு தொடர வேண்டும் என்றும், திமுகவுடன் கள்ளக்கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இதை செய்திருக்க மாட்டார் என்றும், தற்போதைய அரசு இதை செய்யும் என நம்புவதாகவும், திமுக தமிழ்நாட்டிற்கு மாபெரும் தீங்கையும், கொடிய விஷக்கிருமியையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், தப்பித்தவறிக்கூட திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்றும் சவுக்கு சங்கர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.