அமெரிக்காவின் பிளெட்ஸர் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறையை வெகுவாகப் பாராட்டினார். மாலத்தீவில் கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில், 'இந்தியாவே வெளியேறு' என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்தவரே அங்கு அதிபராகப் பொறுப்பேற்றார்.
அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே, இந்தியாவில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்தார். மேலும், அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அந்நாட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் முக்கிய ஆலை திடீரென பழுதானது. இதனால் ஒட்டுமொத்த மாலத்தீவிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்நாட்டு மக்களுக்குக் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை உருவானது.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து மாலத்தீவு மீள்வதற்காக, இந்தியா எந்தவித தயக்கமும் காட்டாமல், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை விமானம் மூலம் அனுப்பி அவர்களின் உயிரைக் காப்பாற்றியது. அதற்குப் பிரதிபலனாக இந்தியா வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அது ஒரு நல்ல அண்டை நாடாகச் செய்த அன்பான உதவி அவ்வளவுதான். இதன் பிறகு, அங்கு நிலவி வந்த 'இந்தியாவே வெளியேறு' என்ற தீவிரப் பிரச்சாரம் கணிசமாகத் தணிந்தது.
எனவே, தூதரக உறவுகளில் நம்பிக்கை என்பது செயல்களின் மூலமே கட்டமைக்கப்படுகிறது என்பதை மாலத்தீவு விவகாரம் உணர்த்தியதாக சசி தரூர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் சிறந்த ராஜதந்திர அணுகுமுறைக்கு ஒரு முன்னுதாரணம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.