மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 132 மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி 10 நாட்கள் நடைபெற்றது.
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினரிடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருவதால், தேசிய நெடுஞ்சாலை 2-ல் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பயிற்சி முடித்த என்சிசி மாணவர்களை சாலை வழியாக சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், இந்திய விமானப் படையின் ஏஎன்-32 ரகத்தைச் சேர்ந்த 3 விமானங்கள் மூலம் 132 என்சிசி மாணவர்கள் இம்பாலில் இருந்து அசாம் மாநிலம் குவாஹாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாக அவர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மணிப்பூரில் சிக்கித் தவித்த என்சிசி மாணவர்களை பத்திரமாக மீட்ட இந்திய விமானப் படைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.