மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, தற்போது நடித்துள்ள 'சந்த் மேரா தில்' திரைப்படம் கடந்த 22-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெளியானதைத் தொடர்ந்து, அதில் இடம்பெற்ற ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அனன்யா பாண்டே மீண்டும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
அந்தக் காட்சியில், நடிகை அனன்யா பாண்டே பாரம்பரிய உடையில் பரதநாட்டியம் ஆடுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது நடன அசைவுகள் இயல்பாக இல்லை என்றும், 'ரோபோட்' போல் அசைவுகளை வெளிப்படுத்துவதாகவும் சில நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அந்தக் காட்சியை மையமாக வைத்து ஏராளமான மீம்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
நடிகை அனன்யா பாண்டே சமூக வலைத்தளங்களில் டிரோல்களுக்கு ஆளாவது இது முதல் முறையல்ல. திரையுலகில் அறிமுகமான காலம் முதலே அவரது நடிப்புத் திறன், வசன உச்சரிப்பு மற்றும் முகபாவனைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்துள்ளன. இதற்கு முன்னர், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த 'லிகர்' திரைப்படத்திலும் அவரது நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்தப் படம் வெளியானபோதும் அவர் பல்வேறு கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானார்.
கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் அனன்யா பாண்டே தனது நடிப்பை ஓரளவு மேம்படுத்தியிருந்ததால், அவரை குறிவைத்து வரும் டிரோல்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. இந்நிலையில், 'சந்த் மேரா தில்' படத்தின் இந்த பரதநாட்டியக் காட்சி மீண்டும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.