தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத் தோர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளின் நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் வகையில் காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பும் சட்டம் ஒழுங்கும் திறம்பட பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, மொத்தம் 15,349 ரவுடிகள் (12,650 சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் 2,699 சரித்திர பதிவுறா ரவுடிகள்) அடையாளம் காணப்பட்டு சோதனையிடப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், 3,246 ரவுடிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவர்களில் 844 பேர் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளால், போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிச்சந்தையில் சுமார் ரூ.1.43 கோடி மதிப்புடைய 267 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.