மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜி, சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தா மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, கொல்கத்தாவில் சாலைகளில் தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை எதிர்த்து கொல்கத்தா மாநகராட்சியின் மேத்தியாபுரூஜ் பகுதி டிஎம்சி கவுன்சிலர் விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் சுவேந்து அதிகாரி அரசின் கடுமையான நடவடிக்கைகளால், கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவின் ராஜாபஜார், தபாசியா, பார்க் சர்க்கஸ், தில்லாலா போன்ற பகுதிகளில் சாலைகளை மறித்து தொழுகை நடத்தப்படவில்லை.
மாற்று ஏற்பாடாக, மசூதிகளில் இரண்டு கட்டங்களாக, இருவேறு நேரங்களில் தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் முஸ்லிம்கள் மசூதிகளுக்குள்ளேயே தங்கள் தொழுகையை முடித்துக்கொண்டனர். கொல்கத்தா மாநகராட்சியில் மொத்தம் 144 வார்டுகள் உள்ளன. இதில் டிஎம்சி சார்பில் 136 கவுன்சிலர்கள் உள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் டிஎம்சி தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, வரும் மாநகராட்சித் தேர்தலை மனதில் கொண்டு, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மம்தா முதல்வராக இருந்தபோது பக்ரீத் பண்டிகைக்கு 2 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது, தற்போது அது ஒரு நாளாக மாற்றப்பட்டுள்ளது. வரும் மே 28 அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
