தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஷாஜகான் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக கும்பகோணம் வருகை தந்தார். அவரை அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷாஜகான், சிறுபான்மையினர் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாகக் கூறினார். நாளை மாலை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அதிகாரிகளுடன் முக்கிய கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வக்பு வாரியத்தின் சொத்துக்கள் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் புதிய கணக்கெடுப்பு மற்றும் சர்வே பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே இருந்த அரசுகளின் குறிப்புகளைப் பின்பற்றி, முதல்-அமைச்சர் விஜய்யுடன் கலந்தாலோசித்து விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் குடிகாடு மற்றும் அரியலூர் மாவட்டம் ராமநல்லூர் பகுதிகளை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். தஞ்சை மாவட்டம் பரப்பளவில் பெரியதாகவும், அதிக மக்கள் தொகையுடனும், 8 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளதால், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஷாஜகான் உறுதியளித்தார்.
மேலும், திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுடன் மீண்டும் நேரில் பேசி, அவர்களுக்கு சாதகமான முறையில் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.