சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயில் நேற்று குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்தனர். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து உள் மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருந்தது. சில நாட்களாக சென்னையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்தது.
இந்நிலையில், நேற்று காலை சென்னையில் வானிலை திடீரென மாறியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சென்னையை ஒட்டி வங்கக் கடல் பகுதியில் சுமார் 3 கி.மீ. உயரத்தில் நிலவும் கீழ் மட்ட கழற்சி மற்றும் கடலோர ஆந்திரா வழியாக நீளும் வடக்கு தெற்கு காற்றழுத்த தாழ்வுப் பாதை ஆகியவற்றின் பரஸ்பர செயல்பாட்டால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மேக மூட்டமான வானிலை நிலவியது. காலை 8 முதல் 10 மணி வரை வலுவான கடலோரக் காற்று வீசியது. ஈரப்பதம் உள்ள இந்த கடற் காற்று, சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கணிசமான அளவில் ஈரப்பதத்தை கொண்டு வந்தது. இவற்றின் காரணமாக மேகங்கள் உருவாகி, வெப்ப நிலை குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக, சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஹைதராபாத்தில் இருந்து 82 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த 'ஏடிஆர்' என்ற சிறிய ரக விமானம், மோசமான வானிலையால் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் வானில் வட்டமடித்த இந்த விமானம், திருப்பதி விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து வந்த விமானங்களும் வானில் நீண்ட நேரம் வட்டமடித்தன.
வானிலை சீரானதும் அனைத்து விமானங்களும் தாமதமாக தரையிறங்கின. சென்னையில் இருந்து புறப்படவிருந்த டெல்லி, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை, மதுரை, கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கான விமானங்களும் சுமார் ஒரு மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
