கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவங்கள் தொடர்வது மிகுந்த வேதனை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக அரசு உடனடியாக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருவது அரசின் உறுதியான நடவடிக்கைக்குச் சான்றாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற கொடூரச் சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியரிடையே சுய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உரையாடல்களைத் தொடங்க வேண்டும். பாலியல் சமத்துவம் குறித்தும், தற்காப்பு உத்திகள் குறித்தும் பாடத்திட்டங்களில் சேர்த்து கற்பிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் மத்தியில் பாலினம் சார்ந்த புரிதலை ஏற்படுத்தி, அவர்களைத் தற்காப்புக்குத் தயார்படுத்த முடியும்.
பெண்களையும் குழந்தைகளையும் சக மனித உயிர்களாக மதிக்கும் மனப்பான்மையை சமூகத்தில் உருவாக்குவதற்கான விழிப்புணர்வு முயற்சிகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்திற்கு அரசு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
