மத்திய பிரதேசத்தின் தார் நகரில் உள்ள போஜ்சாலா வளாகம், சரஸ்வதி தேவி கோயில் தான் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் முஸ்லிம் தரப்பினர் அறிவித்துள்ளனர். அயோத்தி விவகாரத்திற்குப் பிறகு, இதுபோன்ற தீர்ப்புகள் பிற வழக்குகளிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் மசூதி-கோயில் சர்ச்சை தொடர்பாக 10 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 6 வழக்குகள் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் உள்ளன. மேலும், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு உள்ளது. தற்போது வெளியாகியுள்ள போஜ்சாலா தீர்ப்பு, இந்தியாவின் எதிர்காலம் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில், அயோத்தி பாபர் மசூதி – ராமர் கோயில் வழக்கால் நாடு முழுவதும் பல கலவரங்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் ஆட்சியில் 'வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991' இயற்றப்பட்டது. இதன் படி, நாடு சுதந்திரம் அடைந்த நாளில் வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அவற்றில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும், அவற்றின் மீது வழக்குத் தொடர முடியாது என்றும் கூறப்பட்டது. ராமர் கோயில் மீதான வழக்கின் தீர்ப்பு 2019-ல் வெளியாவதற்கு முன்பாகவே, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.
எனினும், ராமர் கோயில் தீர்ப்புக்குப் பிறகு நிலைமை மெல்ல மாறி வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வாராணசி கியான்வாபி மசூதி வழக்கு மற்றும் மதுரா ஷாயி ஈத்கா மசூதி வழக்குகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. நாடு முழுவதும் சுமார் 1,800 மசூதிகளும், இஸ்லாமியக் கட்டிடங்களும் பண்டைய கோயில்களை இடித்த பின்னரே கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது. இதில் உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 299 புகார்கள் உள்ளன. இதுபோல் கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புகார்கள் உள்ளன. வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ல் இயற்றப்பட்டபோது, அயோத்தி வழக்குக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களின் நிலைமை 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நிலவரப்படியே தொடர வேண்டும் என்று அந்தச் சட்டம் வலியுறுத்தியது. இதன் மூலம், பண்டைய கோயில்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று கோருவதற்கான உரிமையை இந்து தரப்பு இழந்தது. அந்தச் சட்டத்தில் அயோத்தி வழக்கைப் போலவே காசி, மதுரா வழக்குகளையும் விலக்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தபோது பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அன்று அந்தச் சட்டத்தை எதிர்த்த பாஜக, இன்று காசி, மதுரா போன்ற வழக்குகளுக்காக அந்தச் சட்டத்தை ரத்து செய்யுமா என்ற கேள்விக்கும் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.