இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை: ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா

இளைஞர்களின் எழுச்சி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை எழுதத் தொடங்கியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல், மக்களின் ஒற்றுமையான போராட்டம் அதிகார ஆணவத்தை வீழ்த்த முடியும் என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக 'மோடி அரசு ஒருபோதும் பின்வாங்காது' என்ற பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும், வரலாறு வேறு கதைகளையே சொல்கிறது.

முன்னதாக, 2015-இல் நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை மக்கள் எதிர்ப்பால் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 2018-இல் #MeToo இயக்கத்தின் எழுச்சியால் அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவி விலகினார். மேலும், ஒரு ஆண்டுக்கும் மேலாகப் போராடிய விவசாயிகளின் உறுதியால் 2021-இல் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. தற்போது தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளது. அதிகாரத்தின் அகந்தையை உடைக்கக்கூடிய மிகப் பெரிய சக்தி மக்களின் ஒற்றுமையான ஜனநாயகப் போராட்டமே என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இந்தப் போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு உணர வேண்டும். இன்று தெருக்களில் நின்றவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் புதிய தலைமுறை. இந்தத் தலைமுறையினர் 2014-க்கு முந்தைய அரசுகளை நினைவில் வைத்திருப்பவர்கள் அல்ல. அவர்களுக்குத் தெரிந்த ஒரே ஆட்சி மோடி அரசுதான். எனவே, கடந்த கால அரசுகளைக் குறை கூறி தப்பிக்க முடியாது. வேலைவாய்ப்பின்மை ஏன் அதிகரித்தது? கல்வி ஏன் வணிகமயமாக்கப்பட்டது? தேர்வுகள் ஏன் மீண்டும் மீண்டும் கசிகின்றன? இளைஞர்களின் எதிர்காலம் ஏன் நிச்சயமற்றதாக மாறியுள்ளது? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது தற்போதைய அரசின் கடமையாகும்.

கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் நடைபெற்ற NEET, CUET, UGC-NET, JEE உள்ளிட்ட பல்வேறு தேசியத் தேர்வுகளில் ஏற்பட்ட கசிவுகள், தேர்வு ரத்துகள், நிர்வாகக் குழப்பங்கள் ஆகியவை மாணவர்களின் நம்பிக்கையை கடுமையாகப் பாதித்துள்ளன. கல்வி அமைச்சகம் இந்தப் பிரச்சினைகளில் பொறுப்பேற்காமல், விமர்சனங்களை மறுப்பதிலேயே அதிக அக்கறை காட்டியது. அமைச்சர் மாறினாலும், இந்தத் தோல்விகளுக்குக் காரணமான நிர்வாக அணுகுமுறை மாறாவிட்டால் மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது.

புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை மையப்படுத்தும் முயற்சி, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிரான நீட் திணிப்பு, இந்தி மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்தை ஊக்குவிக்கும் போக்கு, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமனங்களில் மத்திய அரசின் அதிகரித்த தலையீடு ஆகியவை மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

மாணவர்கள் அமைதியாகக் கேள்வி கேட்டால் அவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிப்பதும், போராட்டம் நடத்தினால் காவல்துறையை ஏவுவதும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தால் வழக்கு பதிவு செய்வதும் ஜனநாயக ஆட்சியின் அடையாளமல்ல. கருத்து வேறுபாட்டை குற்றமாகக் கருதும் அரசுகள், வரலாற்றில் ஒருபோதும் நீண்ட காலம் நிலைத்ததில்லை.

தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் ஒரு முடிவு அல்ல; அது ஒரு தொடக்கம். இன்று மாணவர்கள் எழுப்பிய குரல் நாளை வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் குரலாக மாறும்; விவசாயிகளின் குரலாக மாறும்; தொழிலாளர்களின் குரலாக மாறும்; மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களின் குரலாக மாறும். ஜனநாயகத்தின் அடிப்படை உண்மையை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் ஒப்புதலோடு கிடைத்த அதிகாரம், மக்களின் எதிர்ப்புக்கு முன் நிரந்தரமாக நிலைத்திருக்க முடியாது.

தமிழ்நாடு தொடர்ந்து சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம், மொழி உரிமை, மாநில சுயாட்சி மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடி வருகிறது. மாணவர்களின் இந்த எழுச்சி அந்தப் போராட்டத்தின் தேசிய வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தனது ஆணவ அரசியலைக் கைவிட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், கல்வி நிர்வாகத்தில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். 2024 தேர்தல் பாஜகவிற்கு அரசியல் எச்சரிக்கையாக இருந்தது என்றால், இளைஞர்களின் இந்த எழுச்சி எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான முன்னுரையாக அமையும்” என்று ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version