இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியைத் தழுவிய நிலையில், மறுநாளே 2026 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இந்த முக்கியப் போட்டியை இந்திய டி20 அணியின் இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர். மூவரும் லண்டனில் கோட் சூட் அணிந்து, ஸ்டைலாக இறுதிப் போட்டியைக் கண்டு களித்தனர்.
மைதானத்தில் இவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கும் இணைந்திருந்தார். இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, 'யுவராஜ் சிங் எனது சிறுவயது ரோல் மாடல்களில் ஒருவர். அவரை முதல்முறையாக நேரில் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடம் நான் நிறைய விஷயங்களைப் பேசினேன். அவர் எனக்குப் பல ஆலோசனைகளை வழங்கினார். அவரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டது ஒரு சிறந்த அனுபவம்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தனது ஆடை ரகசியம் குறித்துப் பேசிய வைபவ், 'இந்த ஆடைக்காக நான் எந்த ஒரு திட்டமிடலும் செய்யவில்லை. போட்டிக்கு கிளம்பும் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக எனக்கு என்ன கிடைத்ததோ அதை உடுத்திக் கொண்டேன். எனது பேட்டிங் பார்ட்னரான அபிஷேக் சர்மாவிடம் கூறித்தான் இந்த ஆடையை அவசர அவசரமாக ஏற்பாடு செய்து அணிந்து கொண்டு வந்தேன்' என்றார்.
டென்னிஸ் மீதான தனது ஆர்வம் குறித்துப் பகிர்ந்துகொண்ட வைபவ், 'நான் கடந்த 4 அல்லது 5 வருடங்களாக டென்னிஸ் விளையாட்டைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆரம்பத்தில் ரஃபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோரின் ஆட்டங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். எனக்கு இப்போது ஜோகோவிச்சை மிகவும் பிடிக்கும். கார்லோஸ் அல்காரஸின் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த முறை ஜானிக் சின்னர் விளையாடிய விதம் அற்புதம். அவர் தான் கோப்பையை வெல்லத் தகுதியானவர் போலத் தெரிகிறது' என்று தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
சந்தன நிற பிளேசர் மற்றும் ஸ்டைலான கண்ணாடி அணிந்து கம்பீரமாகக் காட்சியளித்த சஞ்சு சாம்சன், டென்னிஸ் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 'எனது பெற்றோர் ஆண்ட்ரே அகாசியின் மிகப்பெரிய ரசிகர்கள். நாங்கள் வளர்ந்த காலத்தில் நடால் மற்றும் ஃபெடரர் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால் சமீபகாலமாக நோவக் ஜோகோவிச் தான் எனது மிகப்பெரிய உத்வேகம். அவர் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தன்னை நடத்திக் கொள்ளும் விதம் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த பாடம்' என்றார்.
மேலும் சஞ்சு சாம்சன் கூறுகையில், 'ஒரு விளையாட்டு வீரராக இருப்பது என்பது தொலைக்காட்சியில் மக்கள் பார்ப்பதுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. மைதானத்திற்கு வெளியே நாம் என்ன செய்கிறோம், எவ்வாறு நம்மைத் தயார்படுத்துகிறோம், போட்டிகளில் இருந்து எவ்வாறு மீண்டு வருகிறோம், நாம் எதிர்கொள்ளும் மன ரீதியான போராட்டங்கள் மற்றும் நமது உடல் மற்றும் மனதை எவ்வாறு கவனித்துக்கொள்கிறோம் என்பதில் தான் உண்மையான சவால் உள்ளது. ஜோகோவிச் தனது உடல் மற்றும் மன நலனை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார் என்பது குறித்துப் பேசுவதை நான் அடிக்கடி கேட்டுள்ளேன். அது எனக்கும், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு சிறந்த கற்றலாகும்' என்று குறிப்பிட்டார்.
முன்னாள் வீரர் யுவராஜ் சிங், நோவக் ஜோகோவிச்சின் தன்னம்பிக்கையைப் பாராட்டிப் பேசினார். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடிய தனது போராட்டத்தை ஜோகோவிச்சின் போராட்ட குணத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். மேலும், அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் தலைமுறையினர் இந்த உத்வேகத்தை தங்களது ஆட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பு மற்றும் விம்பிள்டன் இறுதிப் போட்டி, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், டென்னிஸ் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் தூண்டியதாக அமைந்துள்ளது.
