மும்பையில், சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் கணவரை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஹரி ராம் சிங்(35) என்பவர் மாற்றுத்திறனாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா தேவி(30) என்ற மனைவியும், 7 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 19-ஆம் தேதி, சுனிதா தேவி தனது கணவர் ஹரி ராம் சிங்கை தலையில் காயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். கணவர் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் ஹரி ராம் சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். சுனிதா தேவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவரது 7 வயது மகனிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், சுனிதா தேவி தனது கணவரை கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும் ஹரி ராம் சிங் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் சுனிதா தேவியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சம்பவத்தன்று சுனிதா தேவி தனது கணவரிடம் சேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ஹரி ராம் சிங் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுனிதா தேவி, தனது கணவரின் தலையில் குக்கர் மூடியால் ஓங்கி அடித்துள்ளார். மேலும், அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் ஹரி ராம் சிங் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

