மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுஜித் போஸை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சுஜித் போஸ், கொல்கத்தாவின் சவுத் டம் டம் நகராட்சியின் துணைத் தலைவராக இருந்த காலத்தில், சுமார் 150 பேருக்குச் சட்டவிரோதமாக வேலை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தொடர் விசாரணைக்குப் பிறகு சுஜித் போஸ் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது சுஜித் போஸ் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததோடு, உண்மைகளை மறைக்க முயன்றதாலும் அவரைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அதிரடி கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிதான்நகர் தொகுதியில் போட்டியிட்ட சுஜித் போஸ், பாஜக வேட்பாளர் சரத்வத் முகர்ஜியிடம் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

