மேற்கு வங்கத்தில் மக்களின் நலனை முன்னிட்டு, சுமார் 400 பிரத்யேக உணவகங்களில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் 5 ரூபாய்க்கு மீன் சாதம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 208 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த அறிவிப்பின் மூலம், பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன் உணவுக்கு சிக்கல் ஏற்படும் என எதிர்க்கட்சியினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் மதுபான கடைகள் செயல்பட அனுமதிக்கப்படாது என்ற முக்கிய அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் வழங்கும் 'அன்னபூர்ணா' திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகிக்கப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய குடிமக்களும் பயன்பெறலாம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்க சுகாதாரத்துறையிலிருந்து தனியாக 'ஆயுஷ்' (AYUSH) துறை உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து அவர்களை நாடு கடத்துவதற்கு முன்னர் தங்க வைக்க தடுப்பு மையங்கள் அமைக்கவும், மாநில அரசுப் பணிகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், தேர்தல் வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும் முதல்வர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
